Facebook Badge

Thursday, July 24, 2014

மனுஷன்டா பகுதி - 1

மனுஷன்டா
பகுதி - 1
கடும் குளிர் இருக்கும் கார்த்திகைமாதம் ஆரம்பம்....அய்யப்ப பக்தர்கள் மாலை தருவித்து சாலையில் நடமாடிக்கொண்டிருக்க...
அந்த மார்வாடி ஆஸ்பத்திரி வாசலில் முழங்கால் மடித்து குத்திட்டு உட்காந்துகொண்டிருந்த இரு கிராமத்து பெண்மணிகளில் ஒருவர் இரு விரல்களை வாயில் வைத்து புளிச்சென்று வெற்றிலையை ஒரு பக்கமாகத்துப்பி, ''பாத்தியா...நம்ம முருகேசனுக்கு மூணாவதும் ஆம்பளப்புள்ள பொறந்திருக்கு'' என்று சந்தோஷமாக கூறினார்....
ஆமாம் என்று அந்த சந்தோஷத்தை உள்வாங்கிய இன்னொருவர் வேகமாக எழுந்து அண்ணே என்று சந்தோஷமாக கூவியவாறே முன்னாள் நகர்ந்தார்...அங்கே வேகமாக வந்து கொண்டிருந்த முருகேசனைப்பார்த்து ''அண்ணே...நீ பால் வாங்க போனவுடனே நர்சம்மா வெளியே வந்தாங்க....உனக்கு ஆம்பளப்புள்ள புறந்திருக்காம்...இன்னும் அரை மணிநேரம் ஆகுமாம்....பாக்க...சொன்னாங்க...''என்று பூரிப்பாய் கூற...'முருகா' என்று ஆனந்தப்பட்ட முருகேசன் அவரை கேள்வியாய்ப் பார்த்தார்...
உடனே..."ஆங்...அண்ணியும் நல்லாருக்காங்கலாம்" என்றார் அந்த பெண்மணி...
''தேவி''...என்று மனதில் மனைவியின் செல்லப்பெயரை மருகியவாறே மேலே பார்த்து ஆஸ்பத்திரியின் உள்நுழைந்தார் முருகேசன்.......
இரு பெரும் தூண்களை இரு பக்கங்களிலும் கொண்டு நடுவே பீதாம்பரர் புகைப்படம் இருந்த அந்த ஆஸ்பத்திரி வராண்டாவில் உள்ளே நுழைந்து எதிர் பக்கம் இருந்த மாடிப்படிகளின் வழியே மேல் ஏறி இடதுபுறம் திரும்பிய முருகேசன், வலது பக்கம் இருந்த அறைகளை பார்த்தவாறே முன்னேறி நடந்தார். மூடியிருந்த மூன்றாவது அறையின் வாசலில் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு கதவு திறக்கக்காத்திருந்தார். 15 நிமிடம் கழித்து அவரைத்தேடிக்கொண்டு வந்த அவரது நண்பர்கள், அவர் உட்காந்திருப்பதைப்பார்த்து "என்ன முருகையா, குழந்த பொறந்துடுச்சா?" என்றவாறே வந்தனர்.
முருகேசன், புன்முறுவலுடன் "ஆம், பையனாம்..நர்சம்மா சொன்னாங்களாம்" என்றார்.
"ஒ, மூணாவதும் பையனா? வாழ்த்துக்கள்" என்றவாறே கை கொடுத்த நண்பர்களைப்பார்த்து, "நேரம் ஆவுன்னு நினைக்கிறேன்...நீங்க போங்க, சாயந்திரம் நம்ப வாழைப்பழக்கடைக்கு வரேன்..பேசுவோம்...நாளைக்கு வந்து பாத்துக்கலாம்" என்று கூறவே நண்பர்கள் கிளம்பினர்.
மூன்று நாள் கழித்து வீட்டுக்கு டிஸ்சார்ஜ் ஆகிய பஞ்சவர்ணம் என்ற தேவியம்மா, முதல் இருமகன்களை அழைத்து "தம்பிகளா, இங்க பாருங்க இன்னொரு தம்பி பாப்பா" என்றவாறே குழந்தைகளை அணைத்து கொஞ்சிய காட்சி கண்கொள்ளாமல் இருந்தது.

No comments:

Post a Comment